புதுக்கோட்டை, ஜூன் 26: புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரிடம் நகை பணத்தை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படும் நபர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தொட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கன் மகன் ராதாகிருஷ்ணன் (22). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது சாவிற்கு நமுனசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கபிலன் அவரது தங்கை கயல்விழி ஆகியோர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் மகனிடம் 12 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு கபிலனும் கயல்விழியும் ஏமாற்றி விட்டதாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
