இலுப்பூர், ஜூன் 25: இலுப்பூர் அருகே திருநல்லூர் ஆங்காங்கே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலுப்பூரில் இருந்து திருநல்லூர் செல்லும் சாலையில் வெள்ளை மரியாள் கோயிலில் இருந்து வளதாடிபட்டி பிரிவு சாலை வரை சாலைகள் சேதமடைந்துள்ளன. இலுப்பூரில் இருந்து திருநல்லூர் வரை சாலை சில வருடங்களுக்கு முன் போடப்பட்டது. இந்த சாலையின் வழியே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதன் வழியே வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இலுப்பூரில் இருந்து திருநல்லூர் வரை சாலைகள் சேதம் அடையாமல் உள்ளது. இருப்பினும், இச்சாலையின் இடையே வெள்ளை மரியாள் கோயிலில் இருந்து வளதாடிபட்டி பிரிவு வரை சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவசர காலங்களில் வாகனத்தை மிகவும் கவனமாக இயக்க வேண்டிய உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
