வானூர், மார்ச் 10: வானூர் தாலுகா ஆரோவில் அருகே லாரி கடத்தல் வழக்கில் பங்குதாரர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கடகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு(39), இவரும் விழுப்புரம் ரங்கமேடு பகுதியை சேர்ந்த கணேசன்(40) என்பவரும் பங்குதாரராக லாரி வாங்கி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி லாரி ஓட்டுனர் கலித்திரம்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32), காலாப்பட்டு பகுதியில் செம்மண் இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆரோவில் அருகே டோல்கேட் பகுதியில் வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் லாரியை கடத்தியது. அவர்களிடம் இருந்து ஓட்டுநர் மணிகண்டன் தப்பித்து வந்து ஆரோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.