நாகப்பட்டினம்,ஜூன்25: நாகப்பட்டினத்தில் 13 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த வாலிபரை சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் வேதநாயக்கன் செட்டி தெருவை சேர்ந்தவர் வில்சன் (60). இவர் கடந்த 20ம் தேதி தனது குடும்பத்தினருடன் புழுக்கம் காரணமாக தனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். மறுநாள் காலை (21ம் தேதி) வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கதவுகளை திறந்து வீட்டின் உள்ளே சென்று பீராவில் வைத்திருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 5 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இதுகுறித்த வில்சன் நாகப்பட்டினம் டவுன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் சேகரித்தனர்.
அப்போது கேமிராவில் அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் சுற்றிதிரிந்த வாலிபரை விசாரிக்க தொடங்கினார். இதில் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஐயப்பன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஐயப்பனை நேற்று முன்தினம் (23ம் தேதி) கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வில்சன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்த நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
