சென்னை: சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ சரவணன் கட்சி பொறுப்புக்கு பணம் பெற்று கொண்டு ஊழல்வாதியாக திகழ்கிறார் என பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மேலும், முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் சரவணன். இவர் மாவட்டம் முழுவதும் பணம் பெற்றுக் கொண்டு கட்சி பொறுப்புகள் வழங்குவதாக 199வது வட்ட துணைச் செயலாளர் வைதேகி குற்றம்சாட்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்து உள்ளார்.
பிறகு அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: நான் சென்னை புறநகர் மாவட்ட 199வது வட்ட துணை செயலாளர் பொறுப்பில் உள்ளேன். சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணன் என்னுடைய பொறுப்புக்கு புதிய ஆட்களை நியமனம் செய்து வருகிறார். முதலமைச்சர் விஜய் கொள்கை என்ன வென்றால் லஞ்சம் வாங்க கூடாது, ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆனால் புறநகர் மாவட்டத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் கட்சி பொறுப்புகள் போட்டு வருகிறார். ஆக மொத்தத்தில் ஊழல் வாதியாக திகழ்கிறார்.
அதனை தட்டிக் கேட்டால் எங்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் கட்சி பொதுச் செயலாளருக்கும் ஆனந்த்துக்கும் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை. இரவு பகல் பாராமல் உழைத்த எனக்கே இந்த நிலைமை. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என கூறி இருக்கிறார்கள். அதையும் மீறி பேசுகிறேன் என்றால் அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருகிறார்.
அதனைக் கேட்டால் கட்சிப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கி விட்டு வேறொருரை நியமிக்கிறார். ஒரு ஆட்டோ டிரைவராக இருந்தவரை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்ததோடு இன்று சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். என்ன தவறு செய்தாலும் வெளியே வந்து விடும். நான் கட்சிக்காக கடன் வாங்கி செலவு செய்துள்ளேன். கட்சித் தலைமை சோழிங்கலூர் சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விசாரிக்க வேண்டும். கட்சிக்கு இழிவுப்படுத்தும் வகையில் பல விஷயங்களை செய்துள்ளார். வெளியில் சொன்னால் கட்சி பெயர் கெட்டுப் போய்விடும்.
நாங்கள் கஷ்டப்பட்டு விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துள்ளோம். இந்த மாவட்டத்தில் யாராவது வீடு கட்டினால் சட்டமன்ற உறுப்பினருடன் இருப்பவர்கள் அதனை தடுத்து நிறுத்தி பணம் கேட்கிறார்கள் என்ற ஆதாரமும் என்னிடம் உள்ளது. இதனை வெளியிடுவேன். சட்டமன்ற உறுப்பினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் அவருடன் இருக்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் எடுத்து இப்போது எம்.எல்.ஏவிடம் பேச முடியாது பார்க்க முடியாது எனக்கூறி தொலைபேசியை துண்டிக்கிறார்.
கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன நிலைமை என்ன என்று தெரியவில்லை. போனில் கூட பேச முடியாத எம்எல்ஏ எப்படி இன்ஸ்டாகிராம் மட்டும் ரீல்ஸ் போட முடிகிறது. வெற்றி பெற்றவுடன் எல்லோரும் வருவார்கள். அன்றைக்கு கட்சி பொறுப்பில் போட கூட ஆள் இல்லாத நிலை இருந்தது. சோழிங்கநல்லூர் தொகுதியில் அனைத்து தவறுகளும் நடந்து வருகிறது விசாரிக்க வேண்டும். நான் பொதுச் செயலாளரை சந்திக்கும்போது இவர் மீதான ஊழல்களை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
