சென்னை வடபழனி – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை ஜூலை மாதத்தில் தொடக்கம்

சென்னை: சென்னை வடபழனி – பூந்தமல்லி இடையிலான 14.6 கி.மீ நீளமுள்ள புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை ஜூலை மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து 4 மாதங்கள் கடந்த நிலையில், எப்போது முதல் தொடங்கும் என்கிற கேள்வி எழுந்து வந்தது.

இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், தற்போது பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை பயணம் செய்ய சுமார் 90 நிமிடங்கள் ஆவதற்குப் பதிலாக, இனி வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும். இது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் (Phase II, Corridor IV) ஒரு பகுதியாகும். வடபழனியில் உள்ள தற்போதைய பச்சை வழித்தடத்துடன் அதாவது சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பாதையுடன் இணைக்கப்படும்.

பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய 10 நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் என கூறப்படுகிறது.

இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் பூந்தமல்லி முதல் போரூர், வடபழனி வரையிலான வழித்தடத்தில் மக்கள் அதிகம் மெட்ரோவை பயன்படுத்த தொடங்குவார்கள் என்பதால் சாலை போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

Related Stories: