திருவனந்தபுரம்: கேரளத்தில் போதை குறைவான மது விற்பனை செய்ய அரசு தீர்மானித்துள்ளது. கேரளத்தில் விஸ்கி, பிராந்தி, ரம் பீர் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை கேரள மதுபான விற்பனைக் கழகம் சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மதுக் கடைகள் மூலம் இந்த மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போதை குறைவான மது வகைகளை விற்பனை செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது. இவற்றுக்கான வரி விதிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 0.5% முதல் 20% வரை ஆல்கஹால் உள்ள மது வகைகள் தான் போதை குறைந்த மதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 0.5% முதல் 10% வரை ஆல்கஹால் உள்ள மது வகைகளுக்கு 120 சதவீதமும், 10% முதல் 20% வரை ஆல்கஹால் உள்ள மது வகைகளுக்கு 175 சதவீதம் வரியும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
