ஓட்டப்பிடாரம், மார்ச் 9: அதிக வாக்காளர்கள் கொண்ட தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி கொ.தளவாய்புரம் கிராம மக்கள் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா எஸ்.கைலாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கொ.தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு அவர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே வாக்குச்சாவடி மையம் அமைக்க வலியுறுத்தி திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் மணிகண்டனை சந்தித்து வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தங்களின் கிராமமான கொ.தளவாய்புரத்தில் சுமார் 725 வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கனவே எங்கள் கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டதால் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கொம்பாடி கிராமத்தில் உள்ள ஆர்.சி.துவக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இடம் மாற்றப்பட்டது.