அரவக்குறிச்சி, ஜூன் 19: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரவக்குறிச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவின் சார்பில் மாணவர்களுக்கான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘டிரக்ஸ்’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் மீ. நெளஷாத் தலைமை வகித்தார். போதைப்பொருள் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.அருண்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த குறும்படம் திரையிடப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்தால் உருவாகும் உடல் நலக்கேடுகள், மனநல பாதிப்புகள் மற்றும் சமூக விளைவுகள் குறித்து குறும்படம் தெளிவாக எடுத்துரைத்தது. மேலும், போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான, ஒழுக்கமுள்ள மற்றும் பொறுப்பான வாழ்க்கையை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் குறும்படத்தை கண்டுரசித்தனர்.
