லாலாபேட்டை, ஜூன் 15: லாலாபேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி குள்ளம்பட்டியில் இருந்து பஞ்சப்பட்டிக்கு சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் தார்ச்சாலை செல்கிறது. இந்த தார் சாலை வழியாக பஞ்சப்பட்டியில் வங்கி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த தார் சாலை சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக இருந்ததால் சாலை சீரமைக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைப்பதற்கு பணிகள் துவங்கப்பட்டு 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்தது.இந்நிலையில் 2 இடங்களில் சிறு பாலங்கள் கட்ட கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பாலம் கட்டும் பணிகளை துவங்காமல் ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். தற்போது வரை பாலம் அமைக்கும்பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெயரின் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சிறு பாலங்கள் கட்டும் பணி முடித்து தார்ச்சாலை முழுவதுமாக அமைத்து தந்திர வேண்டுமென அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
