சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மே 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ம்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு ஆளுநர் ஆர். வி.அர்லேகரை சந்தித்து சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார். அந்த வகையில், 18-ம்தேதி சட்டப் பேரவை கூடுகிறது. அன்று ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார். மறுநாள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்நிலையில், ஆளுநர் உரைமீதான விவாதத்தில் பேசுவது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில், நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக பிரச்சினைகளை முன்வைத்து, அவையில் அரசை எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. ஆளுங்கட்சியின் வியூகங்களை சட்டமன்றத்தில் திறம்பட எதிர்கொள்வது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும், தவெக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தங்களது பலத்தை நிரூபிக்கவும், அவையில் திமுக உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளார். திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆளுங்கட்சியை திணறடிப்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளதால், இன்றைய ஆலோசனை கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
