குருகிராம்: டெல்லியை சேர்ந்த தம்பதி ரகுல் ரத்தோ(41) மற்றும் அவரது மனைவி மீனு(39). கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற மீனுவுக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டைகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அவர்கள், கடந்த ஜனவரி 7ம் தேதி இரண்டு டிஎன்ஏ ஆய்வகங்களில் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
முதல் டிஎன்ஏ அறிக்கையில் குழந்தைகளுக்கும் தந்தையின் மரபணு பொருத்தம் இல்லை என்பதும், இரண்டாவது அறிக்கையில் தாய் அல்லது தந்தை என இருவரின் டிஎன்ஏவும் குழந்தைகளுடன் பொருந்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தங்களுடைய கரு சட்டவிரோதமாக மாற்றப்பட்டு வேறொரு நபருக்கு வழங்கப்பட்டதை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேள்வி எழுப்பியபோது மருத்துவர் நீங்கள் விரும்பும் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரிகின்றது. இதனை தொடர்ந்து தம்பதியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
