மும்முனை மின்சாரம் இல்லாததால் தண்ணீர் இன்றி கருகும் நெல் பயிர்: விவசாயிகள் பாதிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியில் விவசாயிகள் ஏற்கனவே குறுவை நெல் சாகுபடி தொடர்பாக பல்வேறு பணிகளை செய்து நடவு செய்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மும்முனை மின்சாரம் இன்றி நெல் வயல்களுக்கு தண்ணீர் முறையாக பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் நெற்பயிர்கள் கருகியும், வயல்கள் தண்ணீர் இன்றி வெடித்தும் காணப்படுகிறது.

ஏற்கனவே கடன் பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில் மேலும் கடனுக்கு விவசாயிகள் தள்ளப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் நெற்பயிர்களில் மஞ்சள் நிற செம்பேன் தாக்கி விளைச்சலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

கொழைசாவடி குப்பம், கானூர், பவழங்குடி, வளசகாடு, தேத்தாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதுபோன்று விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மும்முனை மின்சாரம், மறுபுறம் நோய் தாக்குதல் உள்ளிட்ட செயல்களால் டெல்டா பகுதியான கடலூர் மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மின்வெட்டு இன்றி விவசாய நெல் பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: