பைக்கில் வந்து செல்போன் பறித்த வாலிபர் கைது

திருப்பூர், மார்ச் 8: திருப்பூர் வீரபாண்டி அருகே பைக்கில் வந்து செல்போன் பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் முருகம்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால் (40). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் மாலை முருகம்பாளையத்தில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்கள் தனபாலிடம் முகவரி கேட்பது போல பேசினர். அப்போது தனபாலின் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.

உடனே தனபால் சத்தம் போட்டதால் அருகிலிருப்பவர்கள் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவரை மட்டும் பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். போலிசார் விசாரணையில் அந்த வாலிபர்  தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அஜீத்குமார் (19) என்பது தெரியவந்தது. மேலும் தற்போது அவர் மங்கலம் சுல்தான் பேட்டை பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: