மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: மே 10ல் விஜய் தம்பி முதல்வராக பதவியேற்றபோது, எனது ஆட்சியிலே நான் மட்டும்தான் பவர் சென்டர் என விண்ணை முட்ட, நரம்பு புடைக்க முழங்கினார். இந்த ஒரு மாதத்திற்குள் விஜய் தம்பியை சுற்றி 4 பேர் பவர் சென்டராக தலைமைச் செயலகத்தை ஆக்கிரமித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட ஒட்டுமொத்த தலைமைச் செயலக நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கவலையடைந்துள்ளது.
அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலங்களில், தங்களின் தனிப்பட்ட உதவியாளர்களை தலைமை செயலகத்திற்கு அழைத்து வந்ததாக செய்தியோ, வரலாறோ கிடையாது. விஜய் தம்பி, நான் மட்டுமே பவர் சென்டர் என்றார். ஆனால் ஜான் ஆரோக்கியசாமி யார்? மொழிப்போர் தியாகியா, தமிழ் இனத்திற்காக சிறை சென்றவரா? விஷ்ணுரெட்டி யார்? ஜெகதீஷ் பழனிச்சாமி யார்? இவர்கள் இந்த மண்ணுக்காக இந்த மக்களுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம்பெற்றவர்களா? ராம்குமார் யார்? அவருக்கும் தலைமை செயலகத்திற்கும் என்ன தொடர்பு? இந்த நால்வரும் நாட்டின் விடுதலைக்காக, மொழிக்காக, தமிழக உரிமைக்காக போராடிய தியாகிகளா? தமிழக மக்களுக்காக போராடி சிறை சென்ற தியாகச் செம்மல்களா?டெல்லிக்கு செல்கிற போதும், தனி விமானத்தில் அரசு அதிகாரிகளை தள்ளி வைத்துவிட்டு இந்த நால்வரை அழைத்துச் செல்கிறார். இவ்வாறு பேசியுள்ளார்.
