கன்னியாகுமரி, ஜூன் 6: பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த 2 தினங்களுக்கு முன் கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, நடைபாதைகளை ஒழுங்கு படுத்த நகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக திரிவேணி சங்கமம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆக்ரமிப்பு கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசிக்கவும் எந்த இடையூறுமின்றி நடந்து செல்லவும் வழிவகை செய்ய கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து நேற்று முக்கடல் சங்கமம் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த ஆக்ரமிப்பு கடைகளை நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார ஆய்வாளர் அந்தோணி,சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அகற்றினர்.
