சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையும், 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் தமிழக அரசு சார்பில் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இந்நிலயில், ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாட்கள் பள்ளி திறப்பை கல்வித்துறை தள்ளி வைத்து, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 4ம் தேதி (இன்று) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 49 நாட்கள் கிடைத்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே சீராக இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் ஏற்கனவே முடிக்கப்பட்டு, மாணவர்களை வரவேற்பதற்கு தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 4 கோடி பாட புத்தகங்களும், சுமார் 5 கோடி நோட்டு புத்தகங்களும் பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் முதல் நாளே இவற்றைப் பெறக்கூடிய வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2026-27) நாட்காட்டியானது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் 417 பள்ளிகளும், 206 தொடக்கப் பள்ளிகளும், 130 நடுநிலைப் பள்ளிகளும், 46 உயர்நிலைப் பள்ளிகளும், 35 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு, காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சுவையான காலை உணவும் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
