திருமலை: பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் நோக்கில் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆபன்ன ஹிருதயாலயா திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தால், அடுத்த நாள் 5 பக்தர்களுக்கு விஐபி தரிசனம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் நன்கொடையுடன், டிக்கெட் விலையான ரூ.2,500ஐயும் செலுத்த வேண்டும். மேலும், இது குழந்தைகளின் சிகிச்சைக்கானது என்பதால், பக்தர்கள் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி பக்தர்கள் ஆபன்ன ஹிருதயாலயா திட்டத்தில் நன்கொடை செலுத்தி விஐபி தரிசனத்தில் சுவாமியை வழிபட்டு வருகின்றனர். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் மாலை 4 மணியளவில் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு மூலவருக்கு ஆரத்தி வழங்கி பிரசாதமாக வாழைப்பழம், தீர்த்தம், சடாரி ஆசிர்வாதம் ஆகியவை மூலவர் சன்னதியிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
