கொச்சி: கும்பமேளாவில் புகழ்பெற்ற மோனலிசா போஸ்லேயின் கணவர் ஃபர்மான் கான் மீது எஸ்சிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, பிரயாக்ராஜ் கும்பமேளாவில் தனது அழகான புன்னகையால் சமூக வலைதளங்களில் வைரலானார். கடந்த மார்ச் மாதம் கேரளாவிற்குச் சென்ற அவர், தனது காதலரான ஃபர்மான் கானுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு கோரியதை அடுத்து, அதிகாரப்பூர்வ கண்காணிப்பில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணத்தின் போது மோனலிசாவுக்கு (16) வயது மட்டுமே ஆகியிருந்ததாகவும், இதற்காக போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேசிய பழங்குடியினர் ஆணையம் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, மோனலிசாவின் தந்தை அளித்த கடத்தல் புகாரின் பேரில், ஃபர்மான் கான் மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தம்பதியினர் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி கவுசர் எடப்பகத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஃபர்மான் கான் மீது பட்டியலினத்தவர் பாதுகாப்பு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
மேலும், இச்சட்டத்தின் பிரிவு 18ன் படி முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும், வழக்கு மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளதால் கேரள நீதிமன்றத்திற்கு இதில் அதிகார வரம்பு இல்லை என்றும் வாதாடினார்.
தம்பதியினர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சசிந்திரன், ‘மத்திய பிரதேசத்திற்குச் சென்றால் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் கேரளாவில் மனு தாக்கல் செய்துள்ளோம்’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூன் 2ம் தேதி வரை ஃபர்மான் கானை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
