நிலப் பிரச்னையால் நடந்த கொடூரம்: கர்நாடகாவில் 6 பேர் சுட்டுக் கொலை

 

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தில் நிலப் பிரச்னை காரணமாக 6 பேர் துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் கோவிந்த்பூர் கிராமத்தில் நிராலே மற்றும் கோலகி ஆகிய இரு குடும்பங்களுக்கு இடையே நீண்டநாட்களாக நிலப் பிரச்னை இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலத் தகராறு காரணமாகவே கோலகி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிராலே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர்.

அவர்களில் சந்து நிராலே, துண்டப்பா நிராலே, சிவபுத்ரா நிராலே, ராகுல் நிராலே, சமர்த் நிராலே மற்றும் ஷபீர் நடாப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த 6 நபர்களை மர்ம கும்பல் முதலில் துப்பாக்கியால் சுட்டும், பின்னர் அரிவாளால் கொடூரமாக வெட்டியும் கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இந்த கொலை வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: