திருத்தணியில் விவசாயத்திற்கு என கூறி செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தப்படும் வண்டல் மண்: வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

 

 

திருத்தணி: விவசாயம், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், திருத்தணி பகுதியில் செங்கல் சூளைகளுக்கு வியாபாரிகள் பயன்படுத்தி வருவதை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீர்வளத்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான ஏரிகளில் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு வருவாய் துறை அனுமதியுடன் இலவசமாக வண்டல் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, விவசாயிகள் வண்டல் மண் எடுக்க விவசாய நிலம் சிட்டா அடங்கல் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்தால், ஆவணங்கள் சரிபார்த்து பின்னர், வட்டாட்சியர் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குகிறார்.

விவசாய நிலத்தில் அளவீடு பொருத்து வண்டல் மண் எடுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் செங்கல் சூளைகள் போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் விவசாயிகள் போர்வையில் இலவச வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் வண்டல் மண் எடுத்துச் செல்ல வேண்டும். இருப்பினும் ஆன்லைன் மூலம் அனுமதி பெறும் செங்கல் சூளை வியாபாரிகள் பொக்லைன், டிராக்டர்கள் வைத்து அதிக அளவில் வண்டல் மண் எடுத்துச் சென்று செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக தரணிவராகபுரம், முருக்கம்பட்டு, தாடூர், பூனிமாங்காடு, பொன்பாடி, என்.என்.கண்டிகை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் செங்கல் சூளைக்கு இலவச வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி வருவதால் அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் அனுமதி கொடுத்த வட்டாட்சியர் கண்டும் காணாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்களிடம் ஊராட்சி ஒன்றிய ஏரிகளில் வண்டல் மண் எடுப்பது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும், இதனால் வண்டல் மண் எடுப்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

Related Stories: