இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் புதிய ராணுவ தளபதி பலி

 

டெய்ர் அல் -பலாஹ்: காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் ஹமாஸ் புதிய ராணுவ தளபதி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசா நகரை குறித்து இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 12 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் காசாவின் ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,‘‘ஹமாஸின் ராணுவப் பிரிவின் புதிய தலைவரைக் குறித்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது பெயர் முகமது ஓடே. அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போரைத் தூண்டிய 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடத்திய தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே முகமது ஓடே என்றழைக்கப்படும் ஒரு நபர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர். ஆனால் அவர் ராணுவப் பிரிவின் தலைவர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. ஹமாஸ் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Related Stories: