சென்னை: தமிழக முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வந்த நிலையில், அந்தப் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி பயணத்தின் போது பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்து பேச திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நேரம் கோரி விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விஜயின் டெல்லி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அஷ்டமி மற்றும் இன்று நவமி தினமாக இருப்பதால், இந்த நாட்களில் முக்கிய அரசியல் தொடக்கங்கள் மற்றும் சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்ற சென்டிமென்ட் டெல்லி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நல்ல நாளில் வரலாம் என டெல்லி தலைமை கூறியதாலேயே பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், விஜயின் டெல்லி பயணம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை, விரைவில் புதிய தேதி அறிவிக்கப்பட்டு பயணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
