திருமலை: தெலங்கானாவில் ரூ.100 கோடி சொத்து குவித்த துணை கலெக்டரை கைது செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. தெலங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தின் சிறப்பு துணை ஆட்சியராக (நகர்ப்புற நில உச்சவரம்பு பிரிவு) வம்சிமோகன் உள்ளார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் ஐதராபாத் வனஸ்தலிபுரத்தில் உள்ள அவரது வீடு, மேட்சல் நகர்ப்புற நில உச்சவரம்பு அலுவலகம், குண்டூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட 11 இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது வம்சி மோகனுக்கு சொந்தமான தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம், அசையும், அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டறியப்பட்டது. சோதனைகளுக்கு பிறகு வம்சி மோகனை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவருக்கு சொந்தமான 2 வங்கி லாக்கர்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. ஊழல் தடுப்பு பிரிவின் சோதனை நடக்கக்கூடும் என முன்கூட்டியே திட்டமிட்டு அங்கிருந்த தங்க நகைகள், ரொக்கம் மற்றும் ஆவணங்களை வேறு இடங்களில் அல்லது பினாமிகளிடம் கொடுத்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
