தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை! காவல்துறை டிஜிபி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை செய்ததாக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ரூ.1.43 கோடி மதிப்புள்ள 267 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 2,476 மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
மாநிலத்தில் வசித்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அமைதியான, பொதுமக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டுமென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரௌடிகளின் நடவடிக்கைகள், போதை மருந்துப் பொருட்கள் பயன்பாடு மற்றும் இதர மனமயக்கப் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்று காவல் துறை உறுதி பூண்டுள்ளது. குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகின்ற குழுக்களின் நடவடிக்கைகளைக் குலைத்தல் போன்ற உறுதியான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு திறம்பட பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக அதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 15,349 ரௌடிகள் (12,650-வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் மற்றும் 2,699-வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணை காரணமாக, 3,246 ரௌடிகள் (வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் -2,468 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள் -778) காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருவதுடன், அவர்களில் 844 (வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் -488 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள் -356) பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காவல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் மாநிலம் முழுதும் பதிவு செய்யப்பட்டு 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளிச்சந்தையில் ரூ. 1,43,78,200/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சத்து எழுபத்தெட்டாயிரத்து இருநுறு மட்டும்) மதிப்புடைய 267.756 கிலோகிராம்கள் எடையுடைய கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள், ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அவர்களுடைய குழுச் செயல்பாடுகளைக் குலைத்தல் மற்றும் ரௌடிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அமைப்புகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான, தொய்வில்லாத நடவடிக்கைகள் தமிழ்நாடு காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகும். கட்டுப்படுத்துதல் பொது அமைதி மற்றும் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வகையிலான குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு காவல் துறை உறுதி பூண்டுள்ளது. என கூறப்பட்டுள்ளது.

Related Stories: