3 இடங்களில் 108 டிகிரி வெயில்: இன்று வெப்ப அலை வீசும்

 

சென்னை: தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 இடங்களில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து இன்று ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் நீடித்து வரும் வளி மண்டல சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. பிற இடங்களில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. அதன் தொடர்ச்சியாக திருத்தணி, சென்னை, வேலூர் பகுதிகளில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரையில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக் கடல் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை நேற்று பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் இடிமின்னலுடன் கனமழை பெய்யும். மேலும், 23ம் தேதியில் திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும். இதேநிலை 27ம் தேதி வரையில் தொடரும்.

வெப்பநிலையை பொருத்தவரையில் 25ம் தேதி வரையில் உள் தமிழகப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. எனினும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதன் காரணமாக இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். வெப்பநிலையும், ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

மேலும், சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. அதிபட்ச வெப்பநிலையால் 108 டிகிரி வெயில் கொளுத்தும். மாலை இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று 24ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்படுகின்றனர்.

Related Stories: