திருப்பூர், மார்ச் 3: மதுபானம் பதுக்கல் மற்றும் போலி மதுபானங்களை கண்டறியும் பொருட்டு தீவிர தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதுபானம், எரிசாராயம் ஆகியவற்றை சட்டவிரோதமாக கடத்துவதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளிடம் கலெக்டர் பேசியதாவது: போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர், அமராவதி நகர் காவல் துறை சோதனைச்சாவடி, அமராவதி நகர் வனத்துறை சோதனைச்சாவடி, சின்னார் வனத்துறை சோதனைச்சாவடி ஆகியவற்றில் கூடுதலாக பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். கேரளா இடுக்கி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் இடுக்கி வட்டாட்சியரிடம் பேசி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உடுமலை கோட்டாட்சியரிடமும், திருப்பூர் மாவட்ட எல்லையில் முக்கியமான பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் செயல்பாட்டில் இருந்து வரும் நேர அளவினை பின்பற்ற வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளில் 30 விழுக்காடுக்கு மேல் விற்பனையாகும் மதுபானக்கடைகளின் விவரங்களின் விற்பனை அறிக்கையினை காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி ஆகியோருக்கு தினசரி அனுப்ப வேண்டும்.