புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: வினாத்தாள் கசிவு காரணமாக, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வை முறையாக நடத்தாத மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், நீட் தேர்வை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். புதுவையில் எக்காரணம் கொண்டும் பிரெஞ்சு மொழியை எடுக்கக் கூடாது. இருமொழி கொள்கையைதான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதல்வர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும்.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மோடியின் ஏஜென்டுகள் ஆளுநராக இருப்பதால் வந்தே மாதரம், தேசிய கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. புதுச்சேரியில் முதல்வர், இரு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் 3 அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்க வேண்டும். இதில் இழுபறி நீடிக்கிறது. பொதுவெளியில் அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடிக்கு பேரம் பேசப்படுகிறது. இன்னும் தாமதமானால் ரூ.150 கோடியாகும். அமைச்சரவை அமைக்கும் முன்பாகவே ஊழல் இருந்தால் இந்தஆட்சி எப்படி இருக்கும். புதுவைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் (ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்) எல்லாம் அமைச்சராக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
