கோவை, மே 18: கோவையில் வீட்டில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.36,800 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சதாம் ஹுசைன் (29). நர்சரி வைத்து நடத்தி வருகிறார்.
இவரது நண்பர்கள் கார்மல் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல்(27) மற்றும் கரும்புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த பாரூக் (38). இவர்களது வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சாதம் ஹுசைன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை மாத்திரைகள், மெத்தமிட்டமின் போதைப்பொருள் மற்றும் ரூ.200 மதிப்புள்ள 184 கள்ளநோட்டுகள் கிடைத்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டின் மதிப்பு ரூ.36,800 ஆகும். மேலும், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை கரும்பு கடையை சேர்ந்த சஹாபுதின் என்ற காஜாமைதீன் வாங்கி கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
