ராஜபாளையம், மே 16: ராஜபாளையம் குருசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மபிஷா(39). கணவர் இறந்துவிட்ட நிலையில் ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி கோவில்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மபிஷா ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். மகள்கள் எதிர்ப்பால் தற்போது அவரிடம் பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மபிஷா வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மகேஷ்குமார், அரிவாளால் மபிஷாவின் இடது கையில் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த மபிஷா ராஜபாளைம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மபிஷா தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மகேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
