மதுரை, மே 16: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.10 உயர்ந்து 103.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.08 உயர்ந்து 95.47க்கும் விற்பனை ஆகிறது. ஆட்டோ, கால் டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், லாபம் பார்த்த ஒன்றிய அரசு, இப்போது விலை உயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது. இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது. தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு. உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
