முன்னாள் முதல்வரின் தனி செயலாளர் உமாநாத் சிவில் சப்ளைக்கு மாற்றம் தொழில்துறை, உயர் கல்வித்துறை கால்நடைத்துறை செயலாளர்களும் மாற்றம்: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறையின் செயலாளராக இருந்த வி.அருண் ராய் உயர்கல்வித்துறை செயலாளராகவும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக பணியாற்றிய சுப்பையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும்,

நிலச் சீர்திருத்த ஆணையராக இருந்த விஜயகுமார் தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், சிறப்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜெயா, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள் தங்கு ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் முதலமைச்சரின் 2வது செயலாளராக பணியாற்றிய சண்முகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையராகவும், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் தகவல், மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சி, செய்தித்துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இளம்பவத், சேலம் மாவட்ட ஆட்சியராகவும், சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியரான பிருந்தா தேவி, கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முன்னாள் முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உமாநாத், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: