சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழா ரத்தானதால், அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 6 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வர திட்டமிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ராகுல் காந்தியின் அலுவலகம் சார்பில் சென்னை விமான நிலைய முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 8.40 மணியளவில் சென்னை வந்துவிட்டு, பின்னர் அன்று மதியமே மீண்டும் டெல்லி செல்ல பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியின் இந்த திடீர் வருகை குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு அவசர ஆலோசனை நடத்தினர். ராகுல் காந்தி தங்குவதற்காக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கவிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதே ராகுல் காந்தியின் வருகைக்கான முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கிடையே, விஜய் ஆதரவு எம்எல்ஏக்களின் கையெழுத்துப் பட்டியலில் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் டிடிவி.தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக கிண்டி போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த குளறுபடிகள் காரணமாக, விஜய் முதல்வராக பதவியேற்க தமிழ்நாடு மாநில பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று காலை முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இந்த விவகாரத்தால் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்ட தகவல் ராகுல் காந்திக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 7 மணியளவில் ராகுல் காந்தியின் சென்னை பயணத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் இருந்து சென்னை விமான நிலைய ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. ராகுல் காந்தி வருகைக்காக விமான நிலையம் முதல் கிண்டி மற்றும் நேரு ஸ்டேடியம் வரை போலீசார் மேற்கொண்டிருந்த பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டன. நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவிருந்த ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
