கம்பம், மார்ச் 1: பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு, ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில், சுருளிப்பட்டியில் நேற்று காலை இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் 180வது பிறந்த நாளை முன்னிட்டும், தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக விளங்கும் நாட்டுமாடுகளை பாதுகாக்கும் விதமாகவும், ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி-சுருளி அருவிச்சாலையில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பொன்காட்சி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம், வழக்கறிஞர் ஈசன் கலந்து கொண்டனர்.