சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய எம்எல்ஏக்கள் தேந்தெடுக்கப்பட்டதை அடுத்து 16வது தமிழ்நாடு சட்டமன்றம் கலைக்கப்படுவதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டு மே 7ம் தேதி, திமுக தலைமையிலான அரசு பதவியேற்று, அதன் தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். 5 ஆண்டுகள் முடிந்து, சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் 23ம் தேதி நடத்தியது.
தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை, தேர்தல் ஆணையம் ஆளுநரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த ஆளுநர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளின்படி, தற்போதைய 16வது சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். சட்டமன்றம் கலைக்கப்படுவது என்பது ஒரு வழக்கமான அரசியல் மற்றும் சட்ட நடைமுறையாகும். புதிய சட்டமன்றம் அமைய வழிவகுக்கும் அவசியமான கட்டமாக இது கருதப்படுகிறது.
சட்டமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகமெடுக்க உள்ளன. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் விரைவில் பதவியேற்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது கூட்டணி, ஆளுநரின் அழைப்பின் பேரில் அரசு அமைக்க முன்வரும். பின்னர் புதிய முதலமைச்சர் பதவியேற்று, அமைச்சரவை அமைத்து நிர்வாக பொறுப்புகளை ஏற்கும் நடைமுறை நடைபெறும்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தேர்தல் முடிந்து புதிய எம்எல்ஏக்கள் தேந்தெடுக்கப்பட்டதை அடுத்து 16வது தமிழ்நாடு சட்டமன்றம் கலைக்கப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் தேர்தல் ஆணையம் வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு சட்டமன்றம் கலைக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.
