காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடி, அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மே 4ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தவெக வேட்பாளர் பிரபு 1,01,358் வாக்குகள் ெபற்று வெற்றி பெற்றார். தொகுதிக்கான தேர்தல் அதிகாரி தரப்பில், அவருக்கான வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அவரும், தவெகவினரும் உடனடியாக அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு, காரைக்குடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்றனர். அலுவலகத்தில் தங்கள் கட்சிக்கொடியை ஏற்றி பறக்க விட்டதுடன், அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு, கொடியை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
எம்எல்ஏ அலுவலகம் என்பது, தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்கும் பொதுவான இடமாக உள்ளது. அரசு நிதியில் கட்டப்பட்ட அல்லது அரசு கட்டிடத்தில் செயல்படும் அலுவலகங்களில், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுவது அரசு விதிமுறைகளின்படி தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில், கட்சி அடையாளம், கொடிகளை பொது இடங்களில் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் நிலையில், எம்எல்ஏ அலுவலகத்தில் கொடி ஏற்றுவது சட்டவிரோதமானது. எனவே இந்த விதிமீறலில் ஈடுபட்ட காரைக்குடி தவெக எம்எல்ஏ பிரபு மீதான, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
