களக்காடு அருகே ஓட ஓட விரட்டி வக்கீல் படுகொலை: தங்கை தற்கொலையால் மைத்துனர் வெறிச்செயல்

களக்காடு: களக்காடு அருகே தந்தை கண் முன்பு வக்கீல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். தங்கை தற்கொலைக்கு பழி தீர்க்க வெறிச்செயலில் ஈடுபட்ட மைத்துனர் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்தவர் சங்கரபாண்டி மகன் பூலுடையார் என்ற பாண்டி (35). இவர் நெல்லை கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருக்கும் சிவராமமங்களத்தை சேர்ந்த ராஜலெட்சுமி என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தம்பதி இருவரும் நெல்லை தியாகராஜநகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 3ம் தேதி பூலுடையாருக்கும், அவரது மனைவி ராஜலெட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ராஜலெட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. ராஜலெட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கு பூலுடையார் தான் காரணம் என்று ராஜலெட்சுமியின் சித்தி மகன் சிவராமமங்களத்தை சேர்ந்த அருணாசல ராஜா (30) கருதினார்.

இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் தவித்த பூலுடையார் கடம்போடு வாழ்வில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். நேற்று மதியம் பூலுடையார் வீட்டில் இருந்தார். அப்போது அருணாசல ராஜா உள்பட 3 பேர் திடீர் என அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்களை கண்டு திடுக்கிட்ட பூலுடையார் வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடினார். எனினும் மூவரும் அவரை ஓட ஓட விரட்டி சென்றனர். அவர்களிடம் இருந்து தப்புவதற்காக பூலுடையார் வேகமாக ஓடிய போது தெருவில் கிடந்த கல் தட்டி கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பூலுடையார் சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணாசல ராஜா, அவரது உறவினர் ராம் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். கடந்த 2ம் தேதி களக்காடு ஜெ.ஜெ நகரில் மனநிலை பாதித்த வாலிபர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: