பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு உர மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

தா.பழூர், ஏப். 25: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம், தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழிப்புணர்வு கூட்டம், கோடாலி கருப்பூர் பஞ்சாயத்தில் உள்ள ஆயிரபாளையம் கிராமத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் கலந்து கொண்டு தலைமை ஏற்று கூட்டத்தினை துவக்கி வைத்தார். இக்கூட்டத்தின் துவக்கமாக மையத்தின் வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா வரவேற்புரை ஆற்றினார்.

இதில் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி பஞ்சாயத்து ராஜ் என்றால் என்ன? அவற்றின் வேலைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் கூட்டத்தில் கூடியிருந்த விவசாயிகளுக்கும், மகளிர்க்கும் சரிவிகித உர மேலாண்மை மற்றும் உயிர் உரத்தின் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. மேலும் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் அளவுக்கு அதிகமாக டிஏபி உரத்தினை வயலில் இடுவதன் மூலம் மண்ணிற்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய பசுந்தாள் உரப்பயிர்கள் பற்றிய சாகுபடி குறிப்புகளை கூறினார்.

இக்கூட்டத்திற்கு கோடாலி கருப்பூர் பஞ்சாயத்து சார்ந்த விவசாயிகள் மகளிர் மற்றும் இளைஞர்கள் என 40-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். விழிப்புணர்வு கூட்டத்திற்கு பிறகு விவசாயிகள் இடையே கருத்து கேட்டதற்கு இணங்க விவசாயிகள் இரசாயன உரங்களை குறைத்து அங்கக உரங்களை இடுவதில் அதிக ஆர்வம் இருப்பதாக கூறினர். இக்கூட்டத்திற்கு மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஷோபனா, சரண்யா, அறிவிச்செல்வி, பிரபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் நன்றி கூறினார்.

 

Related Stories: