தா.பழூர், ஏப் .23: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் ராஜீவ் காந்தி (33) விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகாததால், தனக்கு வாழவே பிடிக்கவில்லை என வீட்டில் உள்ளவர்களிடம் கூறி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனைக்கண்ட உறவினர்கள், ராஜீவ்காந்தியை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜீவ் காந்தி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார், இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜீவ் காந்தியின் தாய் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
