சென்னை: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தும் வாக்குச்சாவடியில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக கீழ்காணும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆணை, மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகிய 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டானது வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது. இதனை மட்டும் காண்பித்து வாக்களிக்க இயலாது. 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20ஏ-ன்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்களிக்க ஏதுவாக, இலவச வாகன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள Saksham App மூலமாகவும், மாவட்ட தகவல் மையத் தொடர்பு எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகக் கட்டுபாட்டு அறை எண் 1800-425-7012 மூலமாகவும், மாற்றுத்திறனாளி நல அலுவலர்களின் தொலைபேசி எண்கள் 94439 68097, 98416 96693 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
