சொன்னாரு..! செஞ்சாரு..!! ‘அன்புக்கரங்கள்’ திட்டம்

 

செஞ்சாரு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, அக்குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒரு அங்கமான குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-இன் கீழ் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்விற்காக நிறுவனம் மற்றும் நிறுவனம் சாரா சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் “தாயுமானவர் திட்டம்” அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகளாவிய சகோதரத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, “அன்புக்கரங்கள்” என்ற திட்டத்தின் மூலம் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை தொடர்ந்து, “அன்புக்கரங்கள்” திட்டத்தை செயல்படுத்த கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள், உங்களுடன் ஸ்டாலின் முகாம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து முதற்கட்டமாக 6,082 குழந்தைகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதம் தோறும் பெற்று வருகின்றனர்.

Related Stories: