பெங்களூரு: கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் பிட்காயின் மோசடி புகாரில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீ கிருஷ்ணாவுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக பெங்களூரு சாந்திநகர் காங்கிரஸ் எம்எல்ஏ என்.ஏ.ஹாரிஷின் மகனும் முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவருமான முகமது நலபாட், மீது குற்றம் சாட்டப்பட்டது. நலபாடிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியிருந்தது. இந்த மோசடியில் கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், சிறப்புப் புலனாய்வுக் குழு நலபாடிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் அமலாக்கதுறை அதிகாரிகள் என்.ஏ.ஹாரிசுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து முகமது நலபாட் கூறுகையில், 21 மணி நேரம் சோதனை நடத்தி 2 மொபைல் போன்களை மட்டுமே அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதை சட்டப்படி சந்திப்போம்’’ என்றார். இது அரசியல் ரீதியில் பழி வாங்கும் நடவடிக்கை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
