சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பெங்களூரு புகழேந்தி எப்படி பாதிக்கப்படுகிறார் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு தடைகோரிய வழக்கின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. புரட்சி அதிமுகவின் முதன்மை செயலாளரான பெங்களூரு வா.புகழேந்தி தாக்கல் செய்திருந்த வழக்கில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அவதூறு பிரசாரம் மேற்கொள்கிறார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அவதூறாக பேசும் எடப்பாடி பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? இந்த வழக்கை தொடர அவருக்கு முகாந்திரம் இல்லை என கூறி வழக்கின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
