ஊட்டியில் ஜெயின் மக்களின் ஆன்மிக விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால், ஊட்டியில் போட்டியிடும் போஜராஜனுக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படவில்லை.
அதை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். நாங்கள் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தினோம். ஒன்று 131வது அரசியல் சட்டத் திருத்த மசோதா, இது பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கானது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 2023-ஐ அமல்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதற்காக அரசியலமைப்பை திருத்த விரும்பினோம். அதுதான் முக்கியமான மசோதா. அந்த மசோதாவுடன் இரண்டு மசோதாக்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஒன்று தொகுதி மறுவரையறை மசோதா, மூன்றாவது யூனியன் பிரதேச மசோதா.
இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. எனவே, அந்த மசோதாவின் ஒரு பகுதியான பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டபோது, தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலனைக்கு வரவில்லை. அது அங்கேயே நிலுவையில் உள்ளது. அதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிப்போம்.
இது ஒரு அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடு. நாங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். 1950-களில் இருந்தே தொகுதி மறுவரையறை நடந்து வருகிறது. இதற்கு மேல் நாம் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும். தொகுதி மறுவரையறையினால் எந்த மாநிலமும் நஷ்டமடையாது. மக்கள் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
