பொள்ளாச்சி: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா தளிபரம்பில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 13 பேர், வால்பாறை சுற்றுலா செல்வதற்காக, நேற்று காலை 5 மணியளவில் ஒரு வேனில் புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் முகமது பஷீத் என்பவர் ஓட்டி வந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரை கடந்து வால்பாறைக்கு காலை 8 மணியளவில் சுற்றுலா வேன் வந்தடைந்தது.
பின்னர் மாலை 5 மணியளவில் வால்பாறையில் இருந்து ஆழியார் செல்லும் மலைப்பாதையான 13வது கொண்டை ஊசி வளைவில் வரும்போது, திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சிறிது நேரத்தில் அந்த வேன் பள்ளத்தில் பாய்ந்தது. 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் இருந்து விழுந்த அந்த வேன், மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தை நோக்கி உருண்டு 12வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் உருக்குலைந்த வேனில் சிக்கியவர்களையும், சாலையில் பலத்த காயத்துடன் சிதறி கிடந்தவர்களையும் பொதுமக்கள் உதவியுடன், கிரேன் மூலமாக மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த அஜிதா (54), ரமலா (52), ஷாரா (43), ஆஷா (41), மஜித் (43), சஜிதா (45), சகிலா (37), ருக்கியா (39) ஆகிய 8 பெண்கள் மற்றும் ஹிஷாம் (12) என்ற சிறுவன் என 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவர் முகமதுபஷீர் (21) மற்றும் வேனில் பயணம் செய்த நெளஷாத் (39),ஷஹாதீன்(11), மஸ்னீன்(10) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
