போச்சம்பள்ளி அருகே பரிதாபம் அண்ணன் இறந்த துக்கத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

போச்சம்பள்ளி, பிப்.19: போச்சம்பள்ளி அருகே அண்ணன் இறந்த துக்கத்தில், சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெரிய கரடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் சுஜித்குமார்(18), மகள் வைசியா(12). இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற லட்சுமணன் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சுஜித்குமார்  வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். ஓசூரில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், திடீரென கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி அந்த நிறுவனத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

6ம் வகுப்பு படித்து வந்த வைசியா, அண்ணன் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்துள்ளார். சுஜித்குமார் உயிரிழந்த நாள் முதல் சோகமே உருவாக சரியாக சாப்பிட முடியாமலும், தூக்கம் இல்லாமலும் தவித்து வந்த வைசியா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். வெளியில் சென்றிருந்த தாய் சாந்தி, சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று வைசியாவை மீட்டனர். ஆனால், அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், நாகரசம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: