கோவை பிப்.19: கோவை நல்லாம்பாளையம் ரோடு செங்கம்மாள் காலனி பகுதியில் செல்வின் என்பவருக்கு சொந்தமான பழைய மின்னணு சாதன பொருட்கள் குடோன் உள்ளது. இந்த குடோனில் பழைய ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி உட்பட பல்வேறு மின்னணு சாதன பொருட்கள் மற்றும் ஏராளமான இரும்பு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை திடீரென இந்த குடோனில் தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். மின் ஒயர் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட மின் பாதிப்பினால் தீ பரவி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் கருதுகின்றனர்.
