சிவகாசி, ஏப்.1: தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதீத வெப்பத்தின் காரணமாக கண்களை முறையாக பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி உள்ளது. வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் நேரடியாக சூரியஒளி கண்களில் படும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்கும் முறை கண் மருத்துவர்கள் கூறியதாவது: கண்கள் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்ய வவண்டும்.
தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் உடல் மற்றும் கண்கள் ஈரப்பதத்துடன் இருக்க முடியும். ஆல்கஹால் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோடைகால பழங்களான தர்பூசணி, வெள்ளரி, நுங்கு போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். அதிக வெப்பம் காரணமாக கண்களில் எரிச்சல் மற்றும் வறட்சி தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது சுய வைத்தியம் செய்யாமல் கண் மருத்துவரை அணுக வேண்டும்.
கண்கள் பாதுகாப்பாக இருக்க குளிர் கண்ணாடி அணியலாம். அடிக்கடி குளிர்ந்த நீரால் கண்கள் மற்றும் முகத்தை கழுவ வேண்டும். கோடை காலங்களில் காற்று மாசுப்பாட்டின் காரணமாக கண் கட்டி வரலாம். அப்போது நாமகட்டி, ஐஸ், வெந்நீர் ஒத்தடம் வைப்பது போன்றவை செய்யக்கூடாது. முறையாக சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வராமல் இருப்பது அவசியம்.
