பாலக்காடு, ஏப். 1: கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் உட்பட 14 மாவட்டங்களில் மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வீட்டிலே இருந்தபடியே வாக்களிப்பதற்கான ஏற்பாடு நேற்று தொடங்கின. பாலக்காடு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 579 வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்குகள் அளிப்பதற்கான விண்ணப்பங்கள் அளித்திருந்தனர்.
இவர்களில் 11 ஆயிரத்து 642 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்களும், 2 ஆயிரத்து 937 பேர் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குகள் சேகரிக்கப்பதற்காக மாவட்டத்தில் 12 சட்டமன்ற தொகுதிகளிலும் 219 அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் விண்ணப்பித்துள்ள முதியோர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முதியோர்கள் செலுத்திய வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
