மஞ்சூர், மார்ச் 31: அதிகரட்டி சுற்று வட்டார பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் நடமாடுவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகம் அதிகரட்டி பகுதிக்குட்பட்ட பரஞ்சாதி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் நடமாடி வருகிறது. இதனால் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் செல்வகுமார் மேற்பார்வையில் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தால் கோடேரி, சன்னிசைடு, குன்னக்கொம்பை, ஆலாடாவேலி, கிரேக்மோர், சட்டன் எஸ்டேட், கிளிஞ்சாடா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தேயிலை மற்றும் தோட்டப்பணிகளுக்கு செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
